சுட்டிப் பையன் சுமேஷ்
நான் முதல்வராக
இருந்த பள்ளியில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். இது ஒரு சிறு சுட்டி பையன்
சுமேஷ் என்பவனைப் பற்றியது.
சுமேஷ் LKG யில்
படித்துக் கொண்டிருந்தான். மிகவும் சுட்டி, ஆனால் பள்ளிக்கு வரும்போதே அழுதுக்
கொண்டே தான் வருவான். வந்து ஒரு இரண்டு மணி நேரம் கழித்து, தன் சக நண்பர்களுடன்
பேசி சகஜமாகிவிடுவான். அவன் ஒரு குறிப்பிட்ட இரு நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு
மற்றவர் SNACKS யை சாப்பிடுவதும் , மதிய நேரத்தில் தூங்கும் பிள்ளைகளை
சீண்டுவதையும் வழக்கமாக கொண்டான்.
வகுப்பளவில்
வகுப்பாசிரியரே கண்டித்து வந்திருக்கிறார். இவர்கள் குறும்பு எல்லை மீறவும்
பாதித்த குழந்தைகளின் பெற்றோரே என்னிடம்
வந்து முறையிட தொடங்கினர். விசாரிக்கலாம், அதற்கு முன்பு வகுப்பாசிரியரை ஒரு முறை
கேட்கலாம் என்று எண்ணி , அவரை அழைத்து விசாரித்தேன். அவரும் ஆமோதித்தார். அவர்
என்னிடம், “ மேம் நீங்க STUDENTS இடம் வந்து பொதுவா கண்டித்து செல்லுங்கள்”, என்றார்.
இப்போது தான் அழுகையை நிறுத்தி பள்ளிக்கு வர ஆரமித்துள்ளார்கள்,
என்று நினைத்துக் கொண்டு வகுப்பிற்கு சென்றேன். செல்வதற்கு முன்பே,
வகுப்பாசிரியரிடம் சுமேஷ் யார் என்று சைகையில் காட்டும்படி கூறி இருந்தேன்.
வகுப்பினுள் நுழைந்ததும், அனைவரும் எழுந்து என்னை WISH செய்தனர். ஆசிரியர், சுமேஷ் அருகில் சென்று
“சுமேஷ் PRINCIPAL MAM வந்திருக்காங்க பாரு நல்லா WISH பண்ணு”, என்று கூற நான் சுமேஷ் யை அடையாளம்
கண்டுக்கொண்டேன்.
நான் சென்று
நட்போடும், அன்போடும் பேச ஆரமிக்க குழந்தைகள் என்னிடம் பயமின்றி அருகில் வந்து
சுமேஷ் பற்றிய தங்கள் குறைகளை கூறத் தொடங்கினர். இதை அறிந்த சுமேஷ் மற்றும் அவனது
இரு நண்பர்கள் , அவரவர் இருக்கையில் அமர்ந்து சமத்தாக தங்களது SLATE இல் ஏதோ
எழுதியப்படி இருந்தனர்.
இன்று கூப்பிட்டு
இவர்களை கண்டித்தால் சரிவராது, என்று எண்ணி, வகுப்பை விட்டு செல்லும் தருவாயில்,
“இந்த வகுப்பில் ஒரு மூன்று மாணவர்களைப் பற்றி COMPLAINT வந்த வண்ணம் உள்ளது, இது
தொடர்ந்தால் , அவர்கள் பள்ளி விடுதியில் தங்க வேண்டும் , வீட்டுக்கு செல்ல அனுமதி
இல்லை”, என்று சுமேஷ் யை பார்த்தவண்ணம் கூறி
வெளியே வந்தேன். குறிப்பு :(எங்கள் பள்ளியில் விடுதியே இல்லை )
என்னை பார்ப்பதை தவிர்த்து
அந்த மூவரும், அவர்களது slate ல் எழுதியதை அவர்களது வகுப்பாசிரியர்,” போய் நீங்கள்
எழுதியதை மேடத்திடம் காட்டுங்கள் “, என்று கூற, நானும் ஆவலாக ,” இங்கே கொண்டு வா பார்ப்போம்”,
என்றேன். மிகவும் தயங்கியப்படி மூவரும் வந்தனர், slate ட்டைப் பார்த்து வியந்து
போனேன் , அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை , slate பளிச்சென்று இருந்தது. வந்த
சிரிப்பை அடக்கிக்கொண்டு, ஒன்றும் கூறாமல் வகுப்பை விட்டு வெளியே வந்தேன்.
மற்றொரு நாள், மாலை
பெல் அடிக்கும் முன் நான் ஒரு ரௌண்ட்ஸ் செல்வது வழக்கம். அவ்வாறு போய் விட்டு என்
அறைக்கு வந்த போது சுமேஷ் மற்றும் அவனது இரு நண்பர்கள் அழுதப்படி நின்றிருந்தனர், அருகில்
அவர்களது வகுப்பு ஆசிரியர். “என்னம்மா என்ன நடந்தது, ஏன் அழுகிறார்கள் “, என்று
கேட்க.
அதற்கு
வகுப்பாசிரியர், “ mam, இதுவரை இவர்கள் மூவரும் மற்றவர்களோடு வம்பு செய்தார்கள்,
ஆனால் இன்று இவர்கள் ஒருவர் காதை ஒருவர்
கடித்துக் கொண்டார்கள் mam, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அதான்
உங்களிடம் கூட்டிவந்தேன்”, என்றார். மேலும் அவர், “mam,நான் அடிக்கவில்லை உங்களை
பார்க்க செல்லலாம் என்றதும் அடித்தது போல் அழுகின்றனர் mam”, என்றார்
அவர்களை
விசாரித்தேன், நான் பேச தொடங்குவதற்கு முன்பே சொல்லி வைத்தாற்போல் அழத்
தொடங்கினர். மேலும் nursery குழந்தைகளை அழைக்க அவர்களது பெற்றோர் வரத் தொடங்கினர். இனி விசாரித்தால் சரி இருக்காது
என்றெண்ணி , நாளை உங்களை DIRECTOR சார்
அவர்களிடம் அழைத்து செல்கிறேன் என்று மிரட்டி அனுப்பி வைத்தேன்.
எப்படி அழுகை
நின்றது என்று தெரியவில்லை, அடுத்த நொடி THANK YOU MAM என்று கூறியப்படி அவர்களது
பையை எடுக்க சென்றனர்.”சரி நாளை பார்த்துக் கொள்ளலாம் மிஸ்”, என்று கூறினேன்.
அன்று மாலையே COVID
காரணமாக பள்ளிகள் திறக்கக்கூடாது என்ற அறிவிப்பு வர, நான் சுமேஷ் சம்பவத்தை மறந்தே
போனேன்.
அதன் பின் இரண்டு
வருடமும் ஆன்லைன் வகுப்பு நடந்தது. நான் அவர்கள் ஆன்லைன் வகுப்பு நடக்கும் பொது
அவ்வப்போது சுமேஷ் கிளாஸ் லிங்க்கை உபயோகித்து வகுப்பை கவனிப்பேன். அப்போதெல்லாம்
சுமேஷ் மிகுந்த கவனத்துடன் வகுப்பை கவனிப்பான், கேள்விகளும் கேட்டு வந்தான். நான்
வகுப்பு முடியும் தருவாயில்,”என்ன சுமேஷ் GOOD BOY அக இருக்கிறாயா”, என்று கேட்பேன்.
இரண்டு வருடம்
கழித்து ,நேரடி வகுப்பிற்கு வர அரசு உத்தரவிட, PRIMARY வகுப்பு மாணவர்களுக்கு ஒரு
நுழைவுத்தேர்வு போல் வைக்கலாம் என்று முடிவெடுத்து, ஒரு நாள் நுழைவுத்தேர்வு
நடத்தினோம். அதில் நம் ஹீரோ சுமேஷ் 2 ஆம் வகுப்பிற்கு செல்ல அமர்ந்திருந்தான்.
நன்கு விபூதி இட்டு,
தலை படிய சீவி, மேல் சட்டையை நன்கு இன் செய்து ஆளே மாறி இருந்தான். ரௌண்ட்ஸ் ல்
இருந்த நான் ,ஒவ்வொரு வகுப்பிற்கு சென்று மாணவர்கள் எழுதுவதை பார்வையிட்டுக்
கொண்டிருந்தேன். அப்படி இருக்கையில் ஒரு வகுப்பில் நுழையும் போது அந்த வகுப்பின்
மேற்பார்வையாளர், வினாத்தாள்களை மற்ற வகுப்பிற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்ல,
சரி அதுவரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி நான் மாணவர்களை கண்காணிக்க
தொடங்கினேன்.
மாணவர்கள் வினாத்தாளை வாங்கி படிக்க ஆரமிக்க,
சந்தேகம் உள்ளவர்கள் அவர்கள் கையை உயர்த்தி டவுட் என்று கூற வேண்டும் என்று
அறிவித்து இருந்தோம், அதன்படி கை உயர்த்தி கேட்க ஆரமிக்க,MAM என்று சத்தம் வர,
திரும்பிய நான் பார்த்தது நம் ஹீரோ சுமேஷ் நின்றிருப்பதை பார்த்து சந்தோஷப் பட்டு
அவன் சந்தேகத்தை தீர்த்தேன், ஆனால் சுமேஷ் அடிக்கடி சந்தேகம் கேட்பான், நான்
புரிந்ததா என்று கேட்டால், ஓ அதுவா ஓகே ஓகே என்று கூறிவிட்டு எழுத துவங்குவான்.
நான் அவனை பார்க்கும்
போதெல்லாம் ஏதோ மேலே பார்த்து யோசித்து கண்களை உருட்டி விட்டு ஓ ஓ ஓகே என்று கூறிவிட்டு எழுதுவான். இந்த சுமேஷ்
தான், LKG யில் மற்றவனுடைய காதை கடித்து
வைத்தான், என்று எண்ணி சிரித்துக் கொண்டே, நடிகர் விவேக் சொல்வது போல் “எப்படி
இருந்த சுமேஷ் இப்படி ஆயிட்டான் “, என்று எனக்குள்ளே கூறிக் கொண்டேன்.
இப்படியே அரை மணி
நேரம் செல்ல, அந்த வகுப்பு மேற்பார்வையாளர் வந்தார், “நன்றி மேடம் “, என்று
கூறினார். பின்பு நான் ரௌண்ட்ஸ் முடித்து விட்டு , என் அறைக்கு வந்து என் வேலையை
பார்க்க துவங்கினேன். ஒவ்வொரு கண்காணிப்பாளரும் அவரது வகுப்பின் விடைத்தாள்களின்
கட்டை வைத்து விட்டு சென்றனர். அப்போது சுமேஷ்க்கு LKG எடுத்த வகுப்பாசிரியர்
வரவே, மிஸ் சுமேஷ் யை பார்த்தீர்களா, ஆளே மாறிட்டான் என்று சொல்லி அன்றைய
சம்பவத்தை கூறி கொண்டிருக்க....
சுமேஷின் வகுப்பு
மேற்ப்பார்வையாளர், விடைத்தாள் கட்டுடன் ,ஒரு விடைத்தாளை என்னிடம் கொடுத்து , “மேம்
இதை பாருங்க”, என்றார். “யாருடையது?” என்றேன் , “சுமேஷ் மேம்” , என்றார். “இந்த
முறை என்ன செய்து வைத்திருக்கிறானோ? “, என்று நினைத்து வாங்கி பார்த்த நான் வாயடைத்துப்
போனேன். காரணம், ஆங்கில அகராதியில் உள்ள ஐந்து எழுத்துகள் ஆன ACLPF, இவைகளை மாற்றி
மாற்றி எழுதி வினாத்தாளை நிரப்பி இருந்தான்
“ஏன் மேம் என்னாச்சி?”
, என்று கேட்டு அருகில் வந்த அவனது LKG வகுப்பாசிரியர் அவனது விடைத்தாளை பார்த்து
, தன கைகுட்டையால் வாயை பொத்தி சிரிப்பை
அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
என்னால் நம்ப
முடியவில்லை, என்னிடம் சந்தேகம் எல்லாம் கேட்டு, ஓ அதுவா ,ஓகே ஓகே என்று கூறி
எழுதினானே, இதைத் தான் எழுதினானா , என்று நினைத்துக் கொண்டிருக்கையில் . அவனுடைய
மேற்பார்வையாளர் கூறினார், “மேம் அவன் உங்க கிட்ட மட்டும் டவுட் கேட்கல மேம், என்
கிட்டேயும் கேட்டான் மேம், நானும் நம்பிட்டேன் மேம்”, என்றார். கடைசியில் செக்
பண்ணும்போது தான் சொல்கிறான், “மேம் எனக்கு இந்த 5 லெட்டர்ஸ் தான் தெரியும்,”
என்று, கூறினான். கூறிய அவர் மிகவும்
வருத்தப்பட்டார, காரணம் அவர் தான் இரண்டாம் வகுப்பு சுமேஷின் வகுப்பாசிரியர்.
சற்று நேரம் கழித்து
சுமேஷ் அவன் பெற்றோருடன் வந்தான், நான் அவனை பார்த்து,”என்ன சுமேஷ் எப்படி எக்ஸாம்
எழுதின என்று கேட்க”, அவன் அதற்கு “ சூப்பர் மேம் “, என்றான். அவனது பெற்றோர்
என்னிடம் வந்து ,”மேம், சுமேஷை ONLINE
கிளாஸ் உட்கார வைக்க ரொம்ப கஷ்டப் பட்டோம் மேம் , அவனுக்கு ஒரு 5 லெட்டர்ஸ் தான்
தெரியும் ,நீங்க தான் அவன் மிஸ் இடம் சொல்லி கவனிக்க சொல்லணும் என்றனர்.
சுமேஷ் செல்லும் போது,”
மேம் MONDAY ஸ்கூல் வரேன் மேம் .“ என்று கூறியபடி சென்றான். நானும் அவனது
வகுப்பாசிரியரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
Comments
Post a Comment